Tuesday, August 21, 2007

நெஞ்சில் ஒரு முள் *

- பெரியார் திரைப்படம்

- ஸ்ரீபதி பத்மநாபா

தி. ஜானகிராமனையும் சி.சுப்ரமணிய பாரதியையும் வலுக்கட்டாயமாகப் பிடித்துக் கசக்கி உருண்டையாக்கி கேமிராவுக்குள் திணித்ததையெல்லாம் பார்த்து பயந்துபோன மனதோடுதான் ஞானராஜசேகரனின் ‘பெரியார்’ திரைப்படத்தின் அரங்கத்துக்குள்ளும் நுழைய வேண்டியிருந்தது.

ஆரம்பக் காட்சிகளில் சத்யராஜை லொள்ளு பிடித்த கவுண்டனாகவே பார்த்துப் பழகிய கண்களை பெரியாருக்குள் இழுத்து வர பாடுபட வேண்டியிருந்தது. காட்சி அமைப்புகளும் அப்படித்தான். ஆனால் சிறுகச்சிறுக அந்த மகா நடிகன் பெரியாராய் மனசுக்குள் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிடுகிறான். அவன் அவன்தான்!

தமிழ் சினிமாவின் தற்போதைய பிம்பம் மிக அழகான க்ளோஸப் ஷாட்டாக இருக்கிறது எனலாம். திரைமொழியில் என்ன சொல்லலாம், எப்படிச் சொல்லலாம் என்பதில் தேர்ந்த வல்லுனர்கள் நமக்கு வாய்த்திருக்கிறார்கள். பருத்திவீரன், சென்னை - 28 என்று தமிழ் கிராமத்தையும் தமிழ் நகரத்தையும் உலகெங்கும் ‘இந்தா பிடி எங்கள் சினிமா’ என்று தூக்கி வீச நமக்கு ஆட்கள் இருக்கிறார்கள்.

நாமெல்லோரும் கொண்டாடும் ஒரு தலைவனின் வாழ்க்கை வரலாற்றை நாம் திரையில் பார்க்கிற பொற்காலமும் வந்துவிட்டது என்ற மகிழ்ச்சியுடன் உள்ளே நுழைகிறோம். மிகச் சிறப்பான ஒளிப்பதிவு மிகச் சிறப்பான படத்தொகுப்பு... மிகச் சிறப்பான நடிப்பு... ஆனந்தக் கண்ணீரோடு படத்தைப் பார்க்கும்போதும் வெளியே எட்டிப் பார்க்கிறது ஒரு வருத்தக் கண்ணீர்த்துளி... ஞானராஜசேகரனின் முந்தைய படங்களைப் போலவே ஒரு தொலைக்காட்சித் தொடரின் சாயலோடுதான் காட்சிகள் இருக்கின்றன.

அறுநூறு தென்னைகளை வெட்டிச் சாய்ப்பது எப்படி ஒரு அற்புதமான காட்சியாக வெளிவந்திருக்க வேண்டும்! ஒரு வரி வசனத்தில் இதைச் சொல்ல சினிமா தேவையில்லை; ரேடியோ நாடகம் போதும்! கள்ளுக்கடைப் போராட்டத்தை ஒரு நிமிடக் காட்சியாகப் பதிவு செய்யலாமா?

‘உங்கள் குலத்தொழிலை செய்வதை நிறுத்துங்கள்’ என்கிறார் பெரியார். அதற்கொரு காட்சி: பெரியார் ஆற்றங்கரையோரமாக நடந்து வந்துகொண்டிருக்கிறார். ஆற்றங்கரை யோரத்தில் நாவிதனும் இருக்கிறான்; செருப்புத்தைப்பவனும் இருக்கிறான்; துணி துவைப்பவனும் இருக்கிறான்! ஒரே வசனத்தில் எல்லோருக்கும் அந்த செய்தியை அறிவித்து விடுகிறார்!.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி சூப்பராகத் தமிழில் உரையாடுகிறார்; வைக்கத்து நம்பூதிரிகள் நந்நாயி தமிழ் பேசுகிறார்கள்! காந்தி இந்தி அல்லது ஆங்கிலத்தில் பேசுவாரென்றும் நம்பூதிரிகள் மலையாளத்தில் பேசுவார்களென்றும் அறியாத முட்டாள்களா உங்கள் படம் பார்க்க வருகிற தமிழ் மக்கள்?

நல்ல ரசிகர்களை அவ்வப்போது கண்ணீர் மல்கச் செய்யும் காட்சியமைப்புகளும் வசனங்களும்... ‘பெரியார்’ திரைப்படத்தில் ஸ்ரீதர், பாலச்சந்தர் அல்லது விக்ரமன் போன்றவர்களின் ‘இடையீட்டை’ நாங்கள் எதிர் பார்க்கவில்லை.

எங்கள் தலைவனின் வாழ்க்கையைத் திரையில் கண்டு புரட்சி நெருப்புகளாக நாங்கள் வெளியே வந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட திரைப்படங்களை யார் எடுப்பார்கள்? இந்த எண்ணத்தின் மூலம் குரோசோவாவையும் பத்மராஜனையும் ஜான் ஆப்ரஹாமையும் நினைவு படுத்தியதற்கு நன்றி ஞானராஜசேகரன்!

பெரியாரின் வாழ்க்கையை பாமர மக்களும் கொண்டாடும் விதத்தில் ஜனரஞ்சகமாகச் சொல்லியிருக்கும் விதம் பாராட்டப் படக்கூடியதுதான்; ஆனாலும்...
சத்யராஜின் திறம்பட்ட நடிப்பு திரைப்படத்தை தூக்கி நிறுத்துகிறதுதான்; ஆனாலும்...
ஜோதிர்மயி, நாகம்மையாகவே மாறி நம்மை உலுக்கியெடுத்திருக்கிறார்; ஆனாலும்...
இந்தப் படமோ, சத்யராஜோ, ஜோதிர்மயியோ, மக்களின் விருதுயோ அல்லது தேசிய விருதையோ பெறுவதற்கு தடையாக இருக்கும் ஒரே ஒரு தடை என்னவென்றால்...

படம் துவங்குமுன் நண்பர் சாரு சொன்னார்: ‘‘ஞான ராஜசேகரனை ஒரு வருஷம் கே.எஸ். ரவிக்குமார் கிட்ட அஸிஸ்டென்டா இருக்கச் சொல்லணும்.’’ அதை நானும் வழிமொழிகிறேன்.

இத்திரைப்படத்தை முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் எட்டுமுறை பார்த்தாராம்! இந்த வயதிலும் அவர் காட்டும் நெஞ்சுறுதியை வாழ்த்த வயதில்லை; வணங்குகிறேன்.

* நெஞ்சில் ஒரு முள்: திரைப்படத்தின் உச்சக்காட்சியில் பெரியார் பேசுவது.

(ஜூன்2007, அம்ருதா மாத இதழ்)

3 comments:

ச.மனோகர் said...

பெரியார் படம் பார்க்கும் போது நான் என்ன உணர்ந்தேனோ அதை அப்படியே நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்.

மு த் து க் கி ரு ஷ் ண ன் said...

பெரியார் படத்தை பார்க்கும் சூழலை

இன்னும் ஏற்படுத்தி கொள்ளாததற்கு

வருந்துகிறேன்............

govind said...

anna you forgot to mention the way they have shown ki.veeramani....

enna sollunga...kamaloda hey ram kooda romba proffessionala irundahadhu