Wednesday, December 10, 2008

மலையாளக் கரையோரம் 9 தி போலீஸ் ஸ்டோரி

ஆரண்யம் இலக்கிய இதழை நடத்தி கையை சுட்டுக்கொண்டு, அதற்கு தீனி போட்டுக் கொண்டிருந்த மஹாகவி வரைகலை நிலையத்தை நடத்த முடியாதபடிக்கு ஒரு விபத்தில் சிக்கி ஆறு மாதங்கள் பணிகள் எதுவும் செய்யாமலிருந்து, முதல் குழந்தையை இழந்து நின்றுகொண்டிருந்த சோதனைக் காலம்.

எப்படியாவது ஆரண்யத்தை திரும்பவும் கொண்டுவந்துவிட வேண்டும் என்று தீவிரமாக யோசித்து வரைகலைப் பணிகளில் மீண்டும் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் நெடுங்கால நண்பன் இளமாறன் ஒரு திட்டத்தோடு வந்தான். கேரளாவில் அவன் செய்யப்போகும் வியாபாரத்தில் உறுதுணையாக இருக்கவேண்டும். ஆறே மாதத்தில் கோடிக்கணக்கில் சம்பாதித்துவிடலாம். ஒரு நல்ல பங்கு எனக்கும் கொடுப்பான்.
அப்படி என்ன தொழில்? லாட்டரித் தொழில். தெருத்தெருவாக 'நாளெ.. நாளெ.. பூட்டான் பூட்டான்' என்று லாட்டரி விற்பதல்ல; அந்த லாட்டரிச் சீட்டுகளை உற்பத்தி செய்து நடத்தும் நிறுவனம் தொடங்குவது. தமிழ்நாட்டில் தொழில் செய்த அனுபவம் அவனுக்கு இருந்தது. ஒரு நல்ல தொகை கைக்கு வந்தால் மீண்டும் ஆரண்யம் துவங்கலாமே என்றொரு நப்பாசை எனக்கு. சம்மதித்தேன். புலவர்க்கழகு புரவலருடன் சேர்ந்தொழுகல் தானே?

தமிழ்நாட்டில் லாட்டரி தடைசெய்யப்பட்ட பிறகு இங்கு அந்தத் தொழில் நடத்திக்கொண்டிருந்தவர்கள் எல்லோரும் கேரளாவுக்கு இடம்பெயர்ந்துவிட்டார்கள். அங்கே லாட்டரித் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் பெரும்பாலும் தமிழர்கள்தான். அரசாங்கத்துக்கு எப்படி தண்ணி காட்டுவது என்பதில் அவர்களுக்கு இருக்கும் நிபுணத்துவம் பிரமிக்கவைப்பது.
ஒரு நம்பர் லாட்டரியை நீங்கள் வாங்கிப் பழகிவிட்டீர்கள் என்றால் உங்கள் குடும்பத்தைக் காப்பாற்றுவது நெம்ப கஷ்டம். அந்த அளவுக்கு போதை வஸ்து அது. லாட்டரி சீட்டில் இருக்கும் எண்ணின் கடைசி இலக்கத்தை வைத்து விளையாடும் லாட்டரி அது. அதன் பயங்கரத்தை உணர்ந்த அரசு அதை இந்தியா முழுக்க தடை செய்துவிட்டது.

நமக்கா வழி தெயாது? கடைசி இரண்டு இலக்கங்களை வைத்து பரிசு கொடுக்க ஆரம்பிக்கிறோம். அரசு அதிகாரிகளும் இது பிரச்சினையில்லாத லாட்டரி என்று அனுமதி கொடுத்துவிடுகிறார்கள். அவர்களுக்கு பாவம் அந்த அளவுக்கு படிப்பறிவில்லை - இதுவும் ஒரு நம்பர் போன்றதுதான் என்று. ஒவ்வொரு கடையிலும் அரை மணிக்கொரு முறை வரும் லாட்டரி முடிவுகளுக்காக கடைகளின் அறைகளில் கூட்டம்கூட்டமாக அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும் மனிதர்கள்... ஒவ்வொருவர் கையிலும் அடித்துத் திருத்தி எழுதப்பட்ட எண்கள் எழுதிய அட்டவணைகள் கொண்ட கசங்கிய நோட்டுப்புத்தகங்கள்... எளிமையானவர்களின் லலிதமான புரோபபிலிட்டி அன்ட் ஸ்டாட்டிஸ்டிக்ஸ்..! சிஸ்டம் அனாலிசிஸ் அன்ட் ரிசர்ச்...!

இளமாறன் ஆரம்பிக்கப் போகும் லாட்டரி நிறுவனத்தின் மேலாளராக நான் பொறுப்பெடுத்துக் கொண்டேன். அலுவலகம் பாலக்காட்டில் என்றாலும் பதிவு செய்யப்பட்டது கேரளத்தின் வடகோடியில் உள்ள காசர்கோட்டில். எல்லா லாட்டரி நிறுவனங்களும் அங்கேதான் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஏனென்றால் மிக பின்தங்கிய மாவட்டம் அது. அங்கு பதிவு செய்தால் அதிக தொந்தரவு இருக்காது. விற்பனை வரியை மிகக்குறைந்த கையூட்டில் விழுங்கிவிடலாம்.

விற்பனையைத் துவங்குவதற்கு முன் கேரளத்திலிருக்கும் எல்லா ஏஜென்டுகளையும் சென்று பார்த்து அறிமுகம் செய்து கொள்ள வேண்டியிருந்தது. நானும் இளமாறனும் காரில் காசர்கோடு துவங்கி கண்ணூர் மலப்புறம் கோழிக்கோடு பாலக்காடு திருச்சூர் எரணாகுளம் ஆலப்புழை பத்தனம்திட்டா திருவனந்தபுரம் என ஒரு நீண்டதூரப் பயணம் சென்றோம் ...

அப்போதுதான் தெரிந்தது... எப்படிப்பட்ட ஒரு தாதா சாம்ராஜ்யத்துக்குள் நுழைந்திருக்கிறோம் என்பது. பெரும்பாலும் தமிழர்கள் கோலோச்சிக் கொண்டிருக்கும் வியாபாரம். படிப்பறிவைவிட பட்டறிவின் ஆளுமை அவசியம். கோடிக்கணக்கில் பணம் புரளும் தொழில் என்பதால் உயிருக்கு விலையில்லை. போட்டியாளன் எப்போது வேண்டுமானாலும் போட்டுத் தள்ளிவிடுவான்.

ஆரண்யத்துக்காக கேரளத்தின் எல்லா மாவட்டங்களையும் சுற்றிப் பார்த்து பாரம்பர்ய அடிப்படையிலான ஒரு கட்டுரைத் தொடர் எழுதவேண்டும் என்றொரு ஆதர்சம் எனக்கு இருந்தது. இப்போதைய பயணத்தில் எண்களுடனும் தொகைகளுடனும் அலைபேசி அழைப்புகளுடனும் சேர்ந்து கலந்து அது ஒரு ஏக்கக் கனவாகவே கரைந்துவிட்டிருந்தது.

லாட்டரி துவங்க வேண்டிய நாளும் நெருங்கிவிட்டது. நான் திருச்சூரில் இருந்தேன். ஒரு வாரத்துக்கான 21 லட்சம் லாட்டரி சீட்டுகள் இன்று பாலக்காட்டுக்கு வந்திருக்கும். நாளையிலிருந்து எல்லா ஊர்களுக்கும் விநியோகம் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்களில் முதல் குலுக்கல். பாலக்காடு அலுவலகத்திலிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு.

உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் வந்து எல்லா லாட்டரி சீட்டுகளையும் கைப்பற்றி அலுவலகத்துக்கு சீல் வைத்துவிட்டு முதலாளி இளமாறனையும் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார். நான் உடனே செல்ல வேண்டும். டிரைவரை அழுத்திப் பிடிக்கச் சொல்லி மாலை நேரத்தில் பாலக்காடு வந்து சேர்ந்தோம்.

அலுவலக ஊழியர்கள் தெருவில் நின்றுகொண்டிருந்தார்கள். இளமாறனின் அலைபேசி அணைக்கப்பட்டிருந்தது. உடனடியாக காவல்துறை உயரதிகாரியின் அலுவலகத்துக்குப் போகச் சொன்னார்கள். அங்கே கீழ்தளத்தில் ஒரு மூலையில் இளமாறன் நிற்கவைக்கப்பட்டிருந்தான். அருகில் சென்றேன். ஏற்கனவே லாட்டரி நடத்திக் கொண்டிருக்கும் நான்கு நிறுவனங்களில் ஒரு நிறுவனத்தின் முதலாளி செய்த வேலையாம் இது. எங்கள் நிறுவனத்தின் பதிவு சான்றிதழ் காசர்கோட்டிலிருந்து மறுநாள்தான் வந்து சேரும். இன்றைக்கே லாட்டரி சீட்டுகள் வந்துவிட்டதைத் தெந்து கொண்ட எதிராளி போலீஸ் செல்வாக்கைப் பயன்படுத்திவிட்டான். அனுமதியில்லாத லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டன. இன்னும் இளமாறன் மீது எஃப்ஐஆர் போடவில்லை. நான் மேல்தளத்தில் உயரதிகாரியின் அறைக்குச் சென்றேன். வெளியே காத்திருக்கச் சொன்னார்கள்.

காத்திருந்தேன். என் அம்மா சரசுவதி டீச்சர் என் முன்னால் வந்து நின்று, 'எவ்வளவு பதவிசா இலக்கிய இதழெல்லாம் நடத்தி மரியாதையோட வாழ்ந்திட்டிருந்த... இங்க வந்து நின்னுட்டிருக்கியே... வெக்கமா இல்ல?' என்றார். மனைவி சரிதாவும் முன் வந்து நின்று, 'கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சிட்டு அமேரிக்கயிலோ அபுதாபியிலோ போயி சம்பாதிக்கான் நோக்காதெ இவிட வந்நு நில்கான் நாணமில்லே ஸ்ரீயேட்டா?' என்றாள். பெல் அடித்தவுடன் தலையைக் குனிந்தபடி உயரதிகாரியின் அறைக்குள் சென்றேன்.

மலையாள நடிகர் திலகனை போலீஸ் சீருடையில் பார்த்திருக்கிறீர்களா? அவரையே வார்த்து வைத்ததைப் போல கம்பீரமாக அமர்ந்திருந்தார் அந்த உயரதிகாரி. ஐம்பது வயதைக் கடந்தவர். 'பாண்டிகளெல்லாம் இவிடெ வந்நு லோட்டரி என்னு பேரும் பறஞ்ஞு நம்முடெ கவண்மென்டின்டெ பைசயும் ஜனங்களுடெ பைஸயும் கட்டுகொண்டு போகுந்நு. அதினு நீயெல்லாம் கூட்டு. அல்லேடோ?' என்று 'கலிதுள்ளி'னார். 'இல்ல சார். இது கவர்மென்ட் அங்கீகிருதம் உள்ளதாணு சார். நாளெ ராவிலே சர்டிபிகேட் எத்தும் சார்.' என்றேன். 'இந்நு இல்லல்லோ... அதினு எந்து செய்யும்' என்றார். 'சார் வேண்டது எந்தாந்நு வெச்சா செய்யாம் சார்' என்றேன். 'ஓ... மற்றேது... அல்லே...?' என்றார். 'ஞான் பைச மேடிக்குமெந்நு ஆராடோ பறஞ்ஞது?' என்றபடி கோபமாக எழுந்து முன்னால் வந்தார். 'என்னெ கண்டா அத் தரக் காரனாணு எந்நு தோனுந்நுண்டோ?' என்றபடி என் தாடையில் கைவைத்து நிமிர்த்தினார். 'இல்ல சார், குறே பைச செலவு செய்தாணு ஈ பிசினஸ் துடங்கியிட்டுள்ளது. சார் ஒந்நு சஹாயிக்கணம்' என்றேன். 'ம்... ரோபர்ட்டே...' என்று உள்ளே பாத்து கூப்பிட்டார். உளளே இருந்து ரோபர்ட் வந்தான். எதிர் லாட்டரி நிறுவனத்தின் ஆள். 'ஈயாள் மாசம் மூணு லட்சம் ஆணு தருந்நது. தான் எந்து தரும்?' என்று கேட்டார். 'சார் இப்பழாணு துடங்கியிட்டுள்ளது. என்டெ 'போஸி'னோடு சம்சாரிச்சு பறயாம் சார்' என்றேன். 'வில பேசல் ஒன்னும் வேண்டா. மாசம் ரண்டு லட்சம். இந்நு தன்னே வீட்டில் கொண்டு வந்து தரணம். காசு தந்நிட்டு ஆ பாண்டியெ விளிச்சிட்டு போய்க்கோ. அல்லெங்கில் இந்நு லோக் அப்பில் கிடக்கட்டெ' என்றார். 'ஞான் இப்பம் வராம் சார்' என்றபடி கீழே ஓடினேன்.

(அடுத்த மூன்று மணி நேரங்களுக்குள் இரண்டு லட்ச ரூபாயை இளமாறனின் வீட்டிலிருந்து வரவழைத்து அவரிடம் ஒப்படைத்துவிட்டு இளமாறனையும் அழைத்துக்கொண்டு அலுவலகம் வந்தேன். அடுத்த ஒரு மாதத்திலேயே கேரள அரசு தனியார் லாட்டரிகளை தடை செய்து விட்டது. அறுபது லட்ச ரூபாய் நஷ்டம் இளமாறனுக்கு. செய்த வேலையும் ஆரண்யம் கனவும் எனக்கு நஷ்டம்.)

தற்கடுத்த இரண்டாம் நாள் நான் கோவைக்கு வரவேண்டியிருந்தது. இளமாறன் பாலக்காட்டிலேயே இருந்தான். பஸ்ஸில் வந்து இளமாறனின் வீட்டுக்குச் சென்று அவனுடைய பைக்கை எடுத்து என் வீட்டுக்கு சென்றேன். வழியில் 'ஒந்நு பூசிக் களயாம்' என்று தோன்றியதால் பாரில் நிறுத்தினேன். இரவு 10 மணியாகி விட்டது. கம்பெனிக்கு யாரும் இல்லை. காழ் ழிட்டர் பிழாந்தியும் காழ் கிழோ சிக்கனையும் அகத்தில் ஆக்கிவிட்டு வெளியே வந்தேன். காந்திபார்க்கில் வளைவில் போலீசில் மாட்டிக் கொண்டேன்.

டிரங்க் அன்ட் டிரைவன் !

ஒரு வார்த்தை கூட கேட்காமல் சார்ஜ்ஷீட் எழுதிவிட்டார் சார்ஜன்ட். 1200 ரூபாய் அபராதம். 'சார் எதாவது செய்யறதுன்னா செஞ்சுடலாம் சார்...' என்றேன். நிமிர்ந்து பார்த்தார். 'ஓ... லஞ்சம்... இல்லியா?' என்றார். 'என்னப் பாத்தா காசு வாங்குறவன்மாதி தெரியுதா?' என்றார். 'ஆரம்பிச்சிட்டாய்ங்கய்யா...' என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் நான் நினைத்தது போல இல்லை. உண்மையிலேயே உண்மையான போலீஸ்காரர்தான் அவர். 'காலையில ஸ்டேஷனுக்கு வந்து ஃபைனைக் கட்டிட்டு வண்டி எடுத்திட்டு போங்க' என்றார். 'இப்பவே கட்டிடறேனே' என்றேன். 'முடியாது. குடிச்சிட்டு வண்டி ஓட்ட விடமாட்டேன். வேணும்னா ஒண்ணு செய்ங்க... உங்க ஃப்ரண்ட்ஸ் யாரையாவது வரச் சொல்லுங்க... அவங்க ஓட்டிட்டுப் போலாம்... ஐ மீன் குடிக்காதவங்க...' நானும் யோசித்து யோசித்து பார்த்து அந்த கசப்பான உண்மையை எதிர்கொண்டேன். குடிக்காத நண்பர்களே எனக்குக் கிடையாது.... சரிதாவை வேண்டுமானால் வரச் சொல்லலாம். ஆனால் அவளுக்கு வண்டி ஓட்டத் தெயாது. இதற்காகவாவது அவளுக்கு பைக் ஓட்டக் கற்றுக் கொடுக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

அடுத்த நாள் போய் பைக்கை மீட்டு விட்டு மதியம் அதே பைக்கில் ஒரு சிக்னலில் நின்றுகொண்டிருந்தேன். பக்கத்தில் திரும்பிப் பார்த்தால் வெள்ளை பைக் வெள்ளை சீருடையில் அதே சார்ஜன்ட். புன்னகைத்தார். நானும் புன்னகைத்தேன். 'அப்புறம்... இன்னிக்கு எப்படி? குடிச்சிட்டு அந்தப் பக்கம் வருவீங்களா?' என்றார் இளக்காரமாக. 'நிச்சயமா வருவேன் சார். குடிச்சிட்டுத்தான் வருவேன். ஆனா உங்களால என்னைப் பிடிக்க முடியாது.' என்றேன் நானும் இளக்காரமாக. சிக்னல் விழுந்தது.

அன்று இரவு காந்திபார்க்கில் அவர் நின்றுகொண்டிருந்தார். நானும் குடித்துவிட்டுத்தான் போனேன். என்னைப் பார்த்ததும் அவருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. வாய்விட்டு சிரித்து தோளைத் தட்டிக்கொடுத்தார். இப்போது அவர் எனக்கு ஒரு நல்ல நண்பர்.

அன்று குடித்துவிட்டுத்தான் போனேன்... அவரால் பிடிக்க முடியவில்லை... காரணம் ... 'ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதத்தின்' மெட்டில் 'மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியம்' என்ற வரிகளைப் பாடியபடி..... நடந்து சென்றேன்.

Monday, December 8, 2008

மலையாளக் கரையோரம் - 8 - பாரடி நீ மோகினி

ந்த இதழில், பாடலாசிரியர் ஆவது எப்படி என்னும் 'dummies' பாடம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ளுகிறேன். நானும் ஒரு 'dummy' தான் என்றபோதிலும்.

கட்டுரையின் தலைப்பில் உள்ள முதல் வார்த்தை தமிழ் 'பாரடி' அல்ல. ஆங்கில parody. தமிழில் பகடி என்று எளிமையாக மொழிபெயர்க்கலாம். ஏற்கனவே வெளிவந்து பிரபலமான ஒரு பாடலை பகடி செய்து எழுதி பார்ப்பதுதான் parody. அங்கதமே அதன் அடிப்படை அலகு.
கேரளத்தில் 'பாரடி' ஒரு நல்ல குடிசை தொழிலாகவே வளர்ந்து வந்திருக்கிறது - மிமிக்ரியை போல. எந்த ஒரு புது பாடலையும் உடனே 'பாரடி' செய்து ஒரு கேசட்டை இறக்கி விடுவார்கள்.

இதுதான் பாடலாசிரியன் ஆவதற்கான பயிற்சியின் முதல் படி! உதாரணமாக 'காலங்களில் அவள் வசந்தம்' பாடலை ஒரு 'dummy' பகடி செய்தால் எப்படி இருக்கும் என்று பார்ப்போமா?

காலங்களில் அவள் கோடை / கலைகளிலே அவள் கராத்தே / மாதங்களில் அவள் சித்திரை / மலர்களிலே அவள் ஊமத்தை!

பறவைகளில் அவள் கௌதாரி / பாடல்களில் அவள் ஒப்பாரி / கனிகளிலே அவள் பப்பாளி / காற்றினிலே அவள் சூறாவளி /

பேய் போல் சிரிப்பதில் வில்லி / அவள் சனி போல் அணைப்பதில் கில்லி / நெருப்பை வளர்ப்பதில் எண்ணெய் / அவள் கிறுக்கன் ஆக்கினாள் என்னை !

ல்லூரி காலங்களில் பலர் அவரவர்களின் காதல் வளர்வதற்காக 'பாரடி' பாடல் புனைந்துதவ என்னை அணுகுவதுண்டு. நானும் நிறைய எழுதி கொடுப்பேன், பெரும்பாலும் காதலியின் பெயரை பதிலீடு செய்து கொடுத்தால் போதுமானதாயிருக்கும். சேது ராமசாமிதான் அவர்களிலிருந்து வேறுபட்டு காதல் தோல்விக்காக என்னிடம் 'பாரடி' எழுதி தர சொல்லி கேட்டவன். அப்போது 'மண்ணில் இந்த காதலன்றி' பாடல் காதலர்களின் தேசிய கீதமாக இருந்தது. 'பாவலர் வரதராசன்' என்ற புனை பெயரில் கங்கை அமரன் எழுதிய பாடல் அது என்று கேள்விபட்டிருக்கிறேன். கங்கை அமரனின் பாடல் திறமை மீது மேலும் நம்பிக்கை வந்த காலம் அது.

சேது ராமசாமி ஒரு நாள் என்னிடம் வந்து 'எனக்கு இந்த பாட்டை மாத்தி குடு' என்றான் முழு போதையில். 'எல்லாமே ஆப்போசிட்டா இருக்கணும். எனக்கு இந்த காதலை பத்தியும் பொண்ணுகள பத்தியும் நெனச்சாலே கொமட்டீட்டு வருது' என்று கல்லூரி வாசலில் வாந்தி எடுத்தான். அவன் ஒரு நல்ல பாடகன் கூட. காதலை பற்றியும் பெண்களை பற்றியும் என் கருத்தியல் வேறானது என்றாலும் அவனுக்காக எழுதி கொடுத்தேன். (ஒரு பாடல் ஆசிரியன் ஆவதற்கு இந்த குவாலிட்டி மிக அவசியம்.)

அன்று இரவு நண்பர்கள் சபையில் அவன் அந்த பாடலை பாடினான்.

மண்ணில் இந்த காதல் என்னும் போதை என்று தீருமோ / என்று கன்னிப் பாவை என்னும் பேயின் ஆட்டம் ஓயுமோ / பெண்மை என்னும் சாத்தான் வேதம் ஓதுது / உண்மை என்று நம்பி கூட்டம் கூடுது

வெட்டிப்பயல் வேலையத்தவன் தின்னுட்டு ஊரைச்சுத்தும் சொத்தைப்பயல் சோம்பல் உள்ளவன் அத்தனை நபர்களும் பித்தம் தலைக்கேரியிறங்க சிந்தனை மழுங்கிட சுத்தி வந்து சொல்லும் ஒரு சொல் பெண் எனும் ஒரு விஷம் / கன்னியிவள் இருந்தால் சனி தான் பிடிக்கும் / கன்னித்துணை இழந்தால் அதுவும் விலகும் / முடி முதல் அடி வரை முழுவதும் விஷம் தரும் ஒரு பெரும் புதிரினை படைத்தது அவன் தவறே....

(மூன்று முறை மூச்சு வாங்குவது போல் நடித்தான்)

கத்தியென குத்தும் விழிகள் கட்டிலில் விழுந்ததும் கட்டியவன் காதில் மந்திரம் ஓதிடும் இதழ்களும் புற்றிடையும் புன்னகையுமே புத்தியை மயக்கிடும் கற்றிருந்த கல்வி முழுதும் கணத்தில் மறந்திடும் / இதை எண்ணுவதர்கா உனக்கோர் பிறவி? / இவளிடம் பணிந்தான் அவனா துறவி?
...

பாடலை அவன் முடிக்க முடியவில்லை! தர்ம அடி! பெரும்பாலும் அப்போதுதான் காதலில் விழுந்தவர்களின் சபையில் இப்படியொரு பாடலை பாடலாமா? ரணகளம்!

அதிலிருந்து இந்த 'பாரடி'யை மறந்துவிட்டேன்.

சில ஆண்டுகளுக்கு பிறகு இசைத்தொகுப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது, சங்கரின் (சுதேசமித்திரன்) உத்தி ஒன்று எனக்கு பிடித்தமானதாயிருந்தது. சங்கரும் இரண்டு இசைதொகுப்புகள் எழுதியிருந்தான். 'கண்களில் நாணேற்றி அம்பு எய்து காவியம் பாடும் என் காதல் தேவி' என்ற பாடல் எனக்கு பிடித்திருந்தது. அப்போது பிரபலமாயிருந்த யேசுதாசின் மலையாள பாடலான 'சிந்துவில் நீராடி ஈறனாயி' என்ற பாடலின் மெட்டை எடுத்து அதற்கு புதிய வரிகளை எழுதி இசை அமைக்கும் சுரேஷிடம் மூல மெட்டை கூறாமல் புதிய இசை அமைக்க சொன்னபோது ஒரு நல்ல புதிய பாடல் கிடைத்துவிட்டது.

என் சகோதர உறவுமுறையினரும் மலையாளத்தின் பிரபலமான பாடல் ஆசிரியரும் இசைக்கலைஞருமான கைதப்ரம் தாமோதரன் நம்பூதிரியின் சில பாடல்களை எடுத்துக்கொண்டு அதே மெட்டில் வேறொரு சூழ்நிலையை யோசித்து அதற்கு வரிகளை எழுதி சுரேஷிடம் கொடுத்து புது மெட்டு அமைக்க சொன்ன போது நல்ல பாடல்கள் உருவாக ஆரம்பித்தன. அந்த வரிகளை மலையாளத்தில் கைதப்ரத்திடம் சொல்லிக்காட்டுவேன். அவருக்கு மிகப்பிடித்த என்னுடைய சில வரிகள்:

மலைச்சாலை போகும் வரை போகும் மனதில்
இன்னும் உள்ளது இரவின் மிச்சங்கள்
எது பாதை புரியாத போதும்
எதிர்பார்ப்பு எதுவானபோதும்
எனை மூடும் பனிமூட்டம் எல்லாம்
விலகும் உன் விழி வீசும் ஒளியால்...

அது மட்டுமல்லாமல் எனக்கு பிடித்த அவருடைய சில வரிகளை தமிழ்படுத்தி அவருடைய அனுமதியுடன் உபயோகித்ததும் பாடல் எழுதும் பயிற்சியின் ஒரு அங்கமாயிற்று. 'குஞ்சி கிடாவின்னு நல்கான் அம்ம நெஞ்சில் பாலாழி ஏந்தி' என்னும் அவருடைய புகழ் பெற்ற வரியை தமிழில் வேறொரு மெட்டில் இப்படி மாற்றி எழுதியிருந்தேன்: 'பசிக்கின்ற போது அமுதினை ஊட்ட பாற்கடல் நெஞ்சில் ஏந்திய தாயே'

வை மட்டுமல்லாமல் இலக்கணப் பயிற்சி, மரபு கவிதைகளில் பயிற்சி போன்ற மொழி சார்ந்த அறிவுகளும் கூடவே கொஞ்சம் அந்நிய மொழி தேர்ச்சியும் பொது அறிவும் அறிவியல் மற்றும் புள்ளியியல் அறிவும் தமிழ் சினிமா பாடல் ஆசிரியன் ஆவதற்கு மிக மிக அவசியம். பியூட்டிக்கு சமமாக டியூட்டியோ ஸ்வீட்டியோ போட தெரிய வேண்டும். டூயட் பாடலில் 'செவ்வாயில் காற்றே கிடையாது... அது யாருக்கும் தெரியாது... காதலர்களின் கண்ணீரும் அது போல யாருக்கும் தெரியாது...' என்று எழுத தெரிய வேண்டும்.

மிக முக்கியமானது எழுத போகும் பாடலின் பாத்திரத்தின் தன்மை என்ன, அதை ஏற்று நடிப்பவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்வது.

உதாரணமாக, உங்களுக்கு சினிமா பாடல் ஆசிரியனாக ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டது என்று வைத்துக்கொள்ளலாம். இயக்குனர் கதையை விவரித்து, குறிப்பிட்ட பாடலின் சிச்சுவேஷனையும் சொல்லிவிட்டார்.
சிச்சுவேஷன் இதுதான்:

நாயகி தன் சோகச்சுமைகளை நெஞ்சுக்குள் தாங்கியபடி ஊமைக்குயிலாய் பாடும் ஒரு பாடல்.

இசை அமைப்பாளர் 'தத்தகாரத்தை' சிடியில் கீபோர்ட் ட்ராக் கொடுத்துவிட்டார். நீங்களும் ரூம் போட்டு உட்கார்ந்து யோசித்து ஒரு பாடல் எழுதி விட்டீர்கள். நன்றாகத்தான் எழுதியிருக்கிறீர்கள். ஆனால் இயக்குனரும் இசை அமைப்பாளரும் நமட்டு சிரிப்பு சிரித்தபடி வேறு வரிகள் எழுதிகொண்டுவாருங்கள் என்கிறார்கள். வரிகளில் என்ன குறை என்று நீங்கள் யோசிப்பது தெரிகிறது.

'சொந்த சுமையை தூக்கி தூக்கி சோர்ந்து போனேன்' என்று நன்றாகத்தான் எழுதியிருக்கிறீர்கள். சோக ரசம் நன்றாகவே தளும்புகிறது. ஆனால் கதாநாயகியாக அபினயிப்பவர் யாரென்று நீங்கள் தெரிந்து கொள்ளவில்லை!

நமீதா!

Sunday, December 7, 2008

மலையாள கரையோரம் - 7 - கதை திரைக்கதை வசனம் மற்றும் இயக்கம்

சில வாரங்களுக்கு முன் 'காளிதாசன் விவரித்த கள்ள சந்நியாசி' பி.வி.மேனன் பற்றி சொல்லியிருந்தேன். நான் கணினியியல் படித்துக்கொண்டிருந்தபொழுது அவன் எனக்கு சீனியர். அவன் இளங்கலை மேலாண்மையியல் படித்துக்கொண்டிருந்தான்.

கல்லூரியில் எல்லோரிடமும் என்னை பார்த்து ஒரு மரியாதை கலந்த பயம் இருந்தது. இவன் எப்படியேனும் சினிமாவில் பெரியாளாகிவிடுவான் என்று எல்லோருக்கும் பயம். வகுப்பறைக்கு வரும்போதே ஒரு குவார்டர் பாட்டிலோடுதான் வருவான். ஆனால் முதல் பெஞ்சில்தான் உட்காருவான். இரண்டு முறை சென்னைக்கு திருட்டு ரயில் ஏறி திரும்பி வந்தவன். ஆனால் பாடத்தில் சுட்டி. சிஸ்டம் அனாலிசிஸ் பேப்பரில் மூன்று மணி நேரத்தில் எண்பத்தெட்டு பக்கங்கள் எழுதி எண்பத்தெட்டு சதமானம் மதிப்பு எண்கள் வாங்கியவன். உழைப்பின் விஷயத்தில் ஒரு குட்டி ஜெயமோகன் என்றே சொல்லலாம்.

பட்டப்படிப்பு முடிந்தபிறகு என் நெருங்கிய நண்பர்கள் முடிவு செய்தபடி திருப்பூரில் கணினி சம்பந்தமான தொழில் செய்வது என முடிவெடுத்தோம். என் நண்பர்கள் என் மீது மிக நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஏனென்றால் கணிப்பொறியியல் இறுதியாண்டில் என் ப்ராஜெக்ட் தான் பல்கலைகழகத்தில் முதல் மதிப்பெண்ணை பெற்றிருந்தது. நுண் மென் சாளரங்களும் மூஷிகனும் இல்லாத அந்த காலத்திலேயே ஆர்டிபிசியல் இண்டல்லிஜன்சில் ப்ராஜெக்ட் செய்திருந்தேன். நுண் மென் சாளரங்கள் என்றால் மைக்ரோசாப்ட் விண்டோஸ் , மூஷிகன் என்றால் மௌசிகன் என்கிற மௌஸ்.

நண்பர்கள் என்னை நம்பி முதலீடு செய்ய தயார். ஒரே ஒரு நிபந்தனை. நான் சென்னை இருக்கும் திசையில் தலை வைத்து படுக்க கூடாது. ஐந்து நண்பர்கள் சேர்ந்து திருப்பூரில் வன்பொருள் மற்றும் மென்பொருள் நிறுவனம் துவங்கினோம். மூன்று நண்பர்கள் பிரபல கணினி நிறுவனத்தின் வன்பொருள்களை விநியோகம் செய்வது என்றும் நானும் இன்னொரு நண்பனும் மென்பொருள் துறையை கவனித்துக்கொள்வது என்றும் தீர்மானமானது. மென்பொருள்துறை தற்காலம் போல ஏற்றம் பெற்ற துறையாக அப்போது இருக்கவில்லை.

திருப்பூரின் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு எக்ஸ்போர்ட் டாகிமேண்டஷன் என்பது சிம்ம சொம்மனப்பாயிருந்தது. Proforma, Bill of Lading, Shipping Bill இப்படி ஐம்பதுக்கும் மேலான ஆவணங்கள் ஒவ்வொரு ஏற்றுமதிக்கும் சமர்ப்பிக்க வேண்டும். ஒரு மில்லிமீடர் பிழை இருந்தாலும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு நிறுவனம் நிராகரித்துவிடும். அதனால் அதற்கான மென்பொருள் தயார் செய்வது என்றும் அதன் மூலமாக மென்பொருள் துறையில் ஒரு அடி கல்லாகவோ ஒரு மைல் கல்லாகவோ மாறிவிடுவது என்றும் முடிவு செய்தோம்.

ஆறு மாதங்கள் அதற்காக உழைத்து ஒரு பிரபல நிறுவனத்திடம் செய்முறை விளக்கம் அளிப்பதற்கான நாள் நெருங்கிகொண்டிருக்கும்போதுதான் அந்த தொலைபேசி அழைப்பு வந்தது.

பி.வி.மேனன்!

எங்களுக்கு முன்பே திருப்பூருக்கு வந்து ஒரு பின்னலாடை நிறுவனம் நடத்திகொண்டிருக்கிறான். என்னை தேடி கண்டுபிடித்து அழைத்துவிட்டான். அவன் அலுவகத்துக்கு போனபோது மலையாளத்திலேயே பேசினான். தீவிரமான விஷயங்கள் என்றால் என்னிடம் மலையாளத்தில் பேசுவது அவன் வழக்கம்.

இரிக்கு... சாப்ட்வேர் இலானோ இப்போ களி? என்றான்.

அதே என்றேன்.

சினிம எல்லாம் மதியாக்கியோ என்றான்.

போகணம். சமயம் வரட்டே என்றேன்.

நமுக்கு ஒரு சினிமா செய்தாலோ? என்றான்.

நான் அவனை கூர்ந்து பார்த்தேன். எதாவது 'கம்பி' படத்துக்கு அடிபோடுகிரானோ கள்ள சந்நியாசி என்று யோசித்தேன். கம்பி படம் என்றால் பலான படம்.

ஒரு நல்ல அவார்ட் பிலிம் மலையாளத்தில் செய்யணம் என்னொரு ஆச. கதயுண்டோ நின்றே கையில்? என்றான்.

நான் உறைந்து போய் உட்கார்ந்திருந்தேன்.

ஒரு பெமினிஸ்ட் பிரயோகம் ஆயால் நன்னு என்றான்.

இன்னும் உறைந்து போய்விட்டேன். குருவாயுவூர் கிருஷ்ணன் அருள் புரிகிறானா?

நல்ல ஒரு கத உண்டல்லோ பி.வீ! என்றேன்.

ஒரு நல்ல ஹீரோயின் சப்ஜெக்ட். 'ஒரு யுகம்' என்னானு டைட்டில். ஒரு வேசியுடே ஒரு நாள். அன்னு நடக்குன்ன சம்பவங்களானு.
பக்ஷே கிளைமாக்சில் மாத்ரமானு ஒரு பெட்ரூம் சீன் வருன்னது.
வீட்டு சிலவினு வேண்டி ஆரே என்கிலும் கிட்டான் வேண்டி அவள் அலையுன்னு. பக்ஷே ராத்ரி வரே ஆரேயும் கிட்டுன்னில்ல. ஆ அலைச்சலானு படம் முழுவன். ஒடுக்கம் (கடைசியில்) அவளுடே விகலாங்கனாய (ஊனமுற்ற) பர்தாவுமொத்து (கணவனுடன்) குறச்சு கஞ்சி கழிச்சு சுகமாய் கிடன்னு உறங்குன்னு...

கிரேட் என்றான். ஆரானு ஹீரோயின் என்று கேட்டான். மலையாளத்தில் அப்போது ஓரளவு பிரபலமாயிருந்த அவளுடைய பெயரைக் குறிப்பிட்டேன்.

'சுவீதா!'
'வெரி குட்' என்றான்.

அடுத்த வாரம் 'அந்த புரத்தில்' உள்ள அவளுடைய வீட்டுக்கு கதை சொல்ல சென்றேன். அவளுக்கு வளரே இஷ்டமாயி. களைத்து போய் ஆயுதம் இழந்து நிற்கும் நிலையில் 'இன்று போய் நாளை வா' என்று கருணை கூர்ந்தாள்.

அதற்கு அடுத்த வாரம் எர்ணகுளத்தில் ப்ரொடியூசர் பி.வி.மேனோனுடன் சந்திப்பு. நான் எர்ணகுளத்தில் காத்திருந்தேன். பி.வீ. ஒரு ஹோட்டலுக்கு வரச்சொன்னான். பல ஆயிரம் நட்சத்ரங்கள் பெற்ற ஹோட்டல். அங்கு லானில் பி.வீயும் கருணையுள்ளம் கொண்ட சுவீதாவும் தவிர வேறொரு கதாபாத்திரமும் உட்கார்ந்திருந்தார்கள். ஒரு அந்நியன், விதேசி. மூவரும் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தார்கள். சுவீதா என்னை கண்டதும் வரூ கதாகிருத்தே என்றாள். அந்நியன் பி.வீயின் கஸ்டமர். மொராக்கோ விலிருந்து வந்திருந்தான். சிறிது நேரத்தில் அவனிடம் சுவீதா எதோ செவியோதினாள். இருவரும் கிளம்பி சென்றார்கள். நானும் பிவீயும் அப்சொலயுட் வோட்காவை மிக சரியாக சுவைத்துகொண்டிருந்தோம். சிறிது நேரம் கழிந்து பேரர் வந்து பிவீயின் செவியோதினான். வாடா போலாம் என்றபடி ஆயிரம்
நட்சத்திரங்களில் ஒரு நட்சத்திர அறைக்கு அழைத்து போனான்.

அறைக்குள் ஒரு அரைக்கால் சராயோடு அமர்ந்திருந்தான் அந்நியன். அவளை காணவில்லை. பீவீயிடம் 'உனக்கு ஆர்டர் கொடுத்த டி ஷர்டை அணிந்து வர சொல்லியிருக்கிறேன் அவளிடம்' என்றான் அந்நியன். அவள் குளியல அறையிலிருந்து வெளியே வந்தாள். ஆங்கில எழுத்துக்களை கலைத்து போட்டு அதன் மேல் ஒரு நாய்குட்டியின் முகம் அச்சிடப்பட்ட ஒரு டி ஷர்ட். கீழே ஜீன்ஸ். அந்நியனுக்கு புராடக்ட் பிடித்து விட்டது போல. முகத்தில் மகிழ்ச்சி தெறித்தது. கூடவே கையில் பிடித்திருந்த வோட்காவின் குறும்பும் கொப்பளித்தது. டி ஷர்டை சுட்டி காட்டி கொஞ்சம் மேலே தூக்கமுடியுமா டியர் என்றான். சுவீதா டி சாடை கொஞ்சம் சுருட்டி மேலே உயர்த்தினாள் - தொப்புள் தெரிந்தது. அந்நியன் என்னை திரும்பி பார்த்து ஹவ் ஈஸ் இட் என்றான். வெரி குட் என்றேன். நோ நாட் குட் என்ற படி இன்னும் கொஞ்சம் மேலே உயர்த்த சொன்னான். இப்போது பீவீயை பார்க்கிறான். அவன் வெரி குட் சொன்ன போதும் திருப்தியாகவில்லை அந்நியனுக்கு. சுவீதா பொறுத்து பார்த்து மார்புகளில் பாதி தெரிவது வரை உயர்த்தி நிறுத்தினாள். அந்நியனுக்கு இப்போதுதான் வெரி குட்.

ண்பர்கள் என்னை கடுமையாக வைது கொண்டிருந்தார்கள் - தொழிலில் சிரத்தை இல்லாமல் இருப்பதற்காக. நான் அவர்களை அலட்சியமாக பார்த்துக்கொண்டிருந்தேன். இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. நான் பீவீயின் அலுவலகத்துக்கு போனேன். புதிதாய் ஒரு கார் நின்றிருந்தது. பீவீ பிசியாயிருந்தான். காத்திருந்து அறைக்குள் போனேன்.

வாடா ஸ்ரீ ! நானே கூப்படும்னு இருந்தேன். அந்த டி ஷர்ட்ல நல்ல லாபமடா. நீயும் சுவிதாவும் நல்ல ஹெல்ப் பண்ணீங்க. முதல்ல முழு டி ஷர்டுக்குதான் ஆர்டர் குடுத்து அக்ரீமென்ட் போட்டிருந்தான் அந்த பையர். சுவிதாவ பாத்து ஜொள்ளு விட்டு கால் வாசியா குறச்சிட்டான். விலைய மாத்தவே இல்ல. அவ்வளவு துணி நமக்கு லாபம்.
என்றபடி ஒரு நோட்டுக்கட்டை மேசையிலிருந்து எடுத்து 'பத்தாயிரம் இருக்கு, செலவுக்கு வச்சுக்கோ' என்றான்.

அப்போ 'ஒரு யுகம்?' என்று கேட்டேன்.

சினிமாதானே, எடுக்கலாம்டா, இன்னும் ஒரு ரெண்டு மூணு பிசினஸ் நடக்கட்டும். என்றான்.

கதை திரைக்கதை வசனம் நான் எழுதினேன் என்றாலும் 'இயக்கத்தில்' அவன் தான் பெரிய ஆள் என்று உணர்ந்து கொண்டேன், மட்டுமல்லாமல், இயக்குனர் ஆவதற்கு கலையுடன் கூடவே பிசினஸ் மேநேஜ்மன்ட்டும் அவசியம் என்பதையும்.

மலையாளக் கரையோரம் 6 - உந்தன் கண்ணன் என்டே ஈசோ !

மீபத்தில் நடிகர் பார்த்திபன் அவருடைய ஆசிரியர் ஒருவரால் ஏமாற்றப்பட்டதைப் பற்றி எழுதியிருந்தார். நான் வாழ்க்கையில் உயர்வதற்காக எனக்கு உதவிய ஆசிரியர்களைப் பற்றித்தான் எனக்கு நிறைய எழுத இருக்கிறது. அவர்களை இன்னும் திருப்திப்படுத்த முடியாமல் இருக்கிறோமே என்ற வருத்தமும்.

பதினைந்து வருடங்களுக்கு முன்னால் கல்லூரியில் கணிப்பொறித்துறையில் எனது பேராசிரியராக இருந்தவர் மாதவன். என்னுடைய பாட்டெழுதும் திறமையில் அவருக்கு அபார நம்பிக்கை. கல்லூரிக் காலத்து காதல் கவிதைகளும் பின்னர் வெளியே வந்து நண்பர்களுடன் சேர்ந்து 'பெரும்பொருட்செலவில்' தயாரித்து நாங்கள் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்த ஒரு இசைத்தொகுப்பும் அவருக்கு அந்த நம்பிக்கையை அளித்திருந்தது.

இதயத்தில் மிருதங்கம் அடிக்கின்றது
பருவத்தில் கனவொன்று வெடிக்கின்றது
ஆதலால் இது காதலா ?

நம் காதல் வாக்கியத்தில்
நான் எழுவாய் என்றால் நீ பயனிலை
அநத வாக்கியத்திலிருந்து
நீ எழுவாய் என்றால் நான் பயனிலை !

போன்ற வரிகள் நண்பர்கள் மத்தியில் இவன் சினிமாவுக்குப் பாட்டெழுத சரியான ஆள்தான் என்ற உணர்வை உருவாக்கியிருந்தது. (இந்த வரிகள் எல்லாம் பதிவு செய்யப்பட்டுவிட்டவை. இந்த வரிகள் உள்ள பாடல்களை நீங்கள் கேட்க நேர்ந்தால் அந்தப் பாடல் நான் எழுதியது எனவோ அல்லது அந்தப் பாடலாசியர் உயிரோசை வலையிதழின் தீவிர வாசகர் எனவோ நீங்கள் யூகித்துக்கொள்ளலாம்.)

இந்தப் பாடல்களைக் கேட்டுவிட்டுத்தான் மாதவன் சார் என்னை அழைத்து பிரபல பாடகர்களை பாடவைத்து ஒரு ஆல்பம் செய்யலாம். நான் தயாரிக்கிறேன். அது உனக்கு சினிமா ஏணியின் முதல் படியாக இருக்கும் என்றார்.

எங்கள் நகரத்திலும் ஒரு ரெக்கார்டிங் ஸ்டுடியோ இருந்தது. அது ஒரு வணிக வளாகத்தின் தரைகீழ்த் தளத்தில் இருந்தது. அங்கே ரெக்கார்டிங் செய்தால் டூயட் பாடலின் இடையே மோட்டார் பைக் சத்தம் கேட்கும். ஏனென்றால் மேல்தளத்தில்தான் பைக் பார்க்கிங். அந்த அளவுக்கு சவுண்ட் ப்ரூஃப் ! அந்த ஸ்டுடியோவில்தான் நானும் சுதேசமித்திரனும் பரஸ்பரம் அறிமுகமானோம். சுதேசமித்திரனின் கல்லூரித் தோழரான ஏ.எம்.சுரேஷ்தான் இப்போதும் என்னுடைய ஆஸ்தான இசையமைப்பாளர்.

சுரேஷூடன் கலந்தாலோசித்து தமிழில் ஒரு கஸல் இசைத்தொகுப்பைக் கொண்டுவரலாம் என்றும் எஸ்.பி.பி., உண்ணிக்கிருஷ்ணன், வாணி ஜெயராம் போன்றவர்களைப் பாடவைப்பது என்றும் முதலில் ட்ராக் ரெக்கார்டிங்கை திருச்சூரிலுள்ள ஒரு ஸ்டுடியோவில் வைத்துக்கொள்வது என்றும் பிரபலங்களின் குரல் சேர்ப்பை மட்டும் சென்னையில் வைத்துக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்தோம் சென்னையைவிட திருச்சூர் எங்களுக்குப் பக்கம் என்பதால்.

திருச்சூர் நகரத்தில் ஒரு பிரதான சாலையில் இருக்கிறது அந்த ஸ்டுடியோ. கிறிஸ்துவ மிஷனரியால் நடத்தப்படுவது. பூந்தோட்டமும் மரங்களும் காங்கிரீட் சாலைகளுமாக ஒரு தியான நிலையம் போல் அழகும் அமைதியும் நிறைந்தது. ஒரு ஃபாதர்தான் அதன் நிர்வாகி. ரெவரெண்ட் பிரான்சிஸ் ஆலங்காட்டுக்காரன் என்ற நீண்ட பெயருடையவர். ஃபாதர் என்றவுடன் நீண்ட வெள்ளை அங்கியையும் மார்பு வரை தொங்கும் சிலுவையையுமாக உருவகப்படுத்திக் கொள்ள வேண்டாம். டீ-ஷர்ட்டும் ஜீன்ஸ் பேன்ட்டும் மழமழவென்ற முகமுமாக கலக்கலாக இருப்பார். 'ஃபாதர், ஃபாதன்ரிடெ ஃபாதரும் ஒரு ஃபாதராணோ?' என்று கேட்டாலும் கோபப்படாமல் புன்னகைப்பார். நல்ல கலா ரசிகர். அவருடைய அறையின் அமைப்பே அவருடைய ரசனையைப் பறைசாற்றும். ஸ்டுடியோ ஆரம்பிக்கப்பட்ட புதிதிலேயே தேடிச் சென்றவர்கள் நாங்கள் என்பதால் எங்களுக்கு எப்போதும் அங்கு தனி மயாதையும் கவனமும் உண்டு. இப்போது கேரளத்தில் மிகவும் பரபரப்பான ஸ்டுடியோவாக அது மாறிவிட்டது. அங்கேதான் எங்களுடைய 'வண்ணங்கள்' என்னும் தமிழ் கஸல் தொகுப்பின் இசைப்பதிவு நடந்தது.

பின்னர் சென்னை வந்து பாடகர்களின் டிராக்கும் பதிவு செய்யப்பட்டது. ஆனாலும் பல்வேறு நடைமுறைக் காரணங்களால் அதை விற்பனை செய்ய முடியவில்லை. மொத்தச் செலவு அந்த நாளிலேயே இரண்டு லட்சம் ரூபாய். அவ்வளவு செலவு செய்தும் ஏணியின் முதல் படிக்குக் கீழேதான் நிற்கவேண்டியிருந்தது.

அந்த தொகுப்பில் நான் எழுதிய 'உந்தன் கண்ணன்' என்ற பாடலை இங்கே குறிப்பிடவேண்டியிருக்கிறது. மீராவைப் பார்த்து கண்ணன் பாடுவதுபோல் அமைந்த பாடல் அது.

உந்தன் கண்ணன் சின்னக் கண்ணன் வந்தேனே மீரா
நீ இத்தனை நாள் செய்த தவம் கண்டேனே மீரா
உன் காதல் கண்டு ஆசை கொண்டு வந்தேனே மீரா

வெண்ணையைத் தின்று சலித்துப் போனேன்
சேலையைத் திருடி அலுத்துப் போனேன்
ஆநிரை மேய்த்திட நாட்டம் இல்லை
கோபிகைகள் வந்தும் மாற்றம் இல்லை
மாடுகள் மேயும் காட்டினில் நேற்று
காற்றினிலே வந்த கீதம் கேட்டேன்
உன் மீது காதல் கொண்டு வந்தேனே மீரா

சிலகாலம் கழித்து நானும் சுரேஷும் வேறொரு வேலையாக திருச்சூர் செல்லவேண்டியிருந்தது. ஒரு ப்ரொட்யூசரைப் பார்த்து கதை சொல்லவேண்டும். இரண்டு பேர் கையிலும் காசில்லை. எப்படியோ சமாளித்து பயணச் செலவுக்கு மட்டும் பணத்தை ஏற்பாடு செய்து கொண்டு புறப்பட்டோம். திருச்சூர் சென்று வேலையை முடித்தபோது கையிருப்பு இருநூறு ரூபாய்க்கும் குறைவானது. இதுவரை வந்துவிட்டோமே, ஃபாதரையும் பார்த்துவிட்டுப் போகலாம் என்று ஸ்டுடியோவுக்கு சென்றோம்.

ஸ்டுடியோவுக்கு முன்னால் ஒரு சிறிய ஓலைக்குடிசை இருக்கிறது. அது ஒரு ஹோட்டல். குடிசை என்றாலும் 'ஹோட்டல் சிஞ்சூஸ்' என்று ஆர்ப்பாட்டமாக போர்டெல்லாம் இருக்கும். ஸ்டுடியோவில் இருக்கும்போது அங்கிருந்துதான் எங்களுக்கு மதிய உணவு வரும். மத்தி பிரமாதமாக இருக்கும். அங்கு மாலை வேளையில் சூடாக கிடைக்கும் ஜிலேபியின் மீது சுரேஷுக்கு அளவு கடந்த பிரேமை இருந்தது. இன்று ஜிலேபிக்கெல்லாம் சான்ஸே இல்லை. ஊர் போய் சேரமுடியுமா என்று பார்ப்போம்.

எங்களைப் பார்த்ததும் ஃபாதரால் நம்பவே முடியவில்லை. உங்களை எப்படியாவது தொடர்பு கொள்ள வேண்டும் என்றிருந்தேன். நீங்கள் ஊரில் இல்லை என்று தொலைபேசியில் தெவித்தார்கள். இங்கே நீங்கள் வந்தது உண்மையிலேயே ஆச்சர்யம்தான் என்றார். (அப்போது அலைபேசி வசதிகள் கிடையாது.) உள்ளே அழைத்துச் சென்றார். ஒரு ரெக்கார்டிங் நடந்துகொண்டிருந்தது. ஒரு கிறிஸ்துவ பக்திப் பாடல் தொகுப்பு. அதன் தயாரிப்பாளரும் இசையமைப்பாளரும் மிக்ஸிங் அறையில் இருந்தார்கள். அவர்களைப் பார்த்து இவராணு மற்றே பார்ட்டி என்றார். தயாரிப்பாளர் வந்து எங்களின் கையைப் பிடித்துக் கொண்டார்.

அந்த பக்திப் பாடல் தொகுப்பில் மொத்தம் பதிமூன்று பாடல்கள். ஒவ்வொரு பாடலுக்கும் தனி இசையமைப்பானர்; தனி பாடலாசியர்; தனி பாடகர். கடைசிப் பாடலின் பதிவு அன்று நடந்துகொண்டிருக்கிறது. அந்த நேரத்தில்தான் தயாரிப்பாளர் ஃபாதரின் அறையில் இந்த 'உந்தன் கண்ணன்' பாடலைக் கேட்டிருக்கிறார். அதன் மெட்டு அவரை மிகவும் ஈர்த்துவிட்டது. எப்படியாவது இந்த மெட்டு தனக்கு வேண்டும் என்று ஆசை அவருக்கு. இந்த தொகுப்பில் பதினாலாவது பாடலாக அதை சேர்த்துவிட வேண்டும் என்று இரண்டு கால்களிலும் நின்றுகொண்டிருக்கிறார். சரியாக நாங்களும் போய் சேர்ந்துவிட்டோம்.

நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். மாதவன் சார் மனதில் வந்து முறைத்துவிட்டுப் போனார். சுரேஷின் ஒரு கண்ணில் எம்சி பிராந்தியும் மறு கண்ணில் சிஞ்சூஸ் ஜிலேபியும் ஒளிர்வது அப்பட்டமாகத் தெந்தது. நான் தயாரிப்பாளரிடம் 'இந்த மெட்டில் கிறிஸ்துவப் பாடல் சரியாக வராதே... என்டே ஈசோ நின்னே ஞங்ஙள் ஆராதிக்குன்னு என்று எழுதினால் நன்றாகவா இருக்கும்?' என்றேன். அவர் கண்கள் பிரகாசமடைந்தன. 'நன்னாயிட்டுண்டல்லோ? அல்லே ஃபாதர்.' என்று கேட்டார். ஃபாதரும் தலையாட்டினார். 'அடுத்த வரிகளும் இதேபோலப் பறயாமோ? என்றார். 'நின் புண்ய நாமம் சொல்லிச் சொல்லி ஆராதிக்குன்னு; நின் பாஹ்ய ரூபம் கண்டு ஞங்ஙள் ஆராதிக்குன்னு' என்றேன். பதினாலாவது பாடலாசியரும் கிடைத்துவிட்டார்.

அந்த வறுமையில் எங்களுக்கு கிடைத்த மூவாயிரம் உருப்பிகைகளுடன் திருச்சூர் பஸ்நிலையம் அருகே பாரில் மாதவன் சார் எங்கள் நிலைமையைப் புரிந்துகொள்வார் என்று சமாதானப்படுத்திக்கொண்டு ஜிலேபியைக் கடித்துக் கொண்டு மது அருந்தினோம்.

மலையாளக் கரையோரம் 5 : 'டுங்களே' சதாசிவம்

லையாளத்தில் 'அடிபொளி' என்றால் 'கலக்கல்', 'தூள் கிளப்புதல்' இன்ன பிற. தமிழ்நாட்டில் மலையாளத் திரைப்படப் பாடல்களைப் பெரும்பாலும் கேட்பது அரிது. திரைப்படப் பாடல்கள் அறிமுகமான காலந்தொட்டு இங்கு அறிமுகமாகியிருக்கும் மலையாளப் பாடல்கள் சொற்பமே. பழசில் 'ஒரு கடலினக்கரெ போணோரே' புதுசில் ஒரு 'லஜ்ஜாவதியே'.

ஆனால் மலையாளக் கரையோரம் அப்படியல்ல. அந்தக் காலத்து 'காலங்களில் அவள் வசந்தம்' தொடங்கி இன்றைய 'நாக்க முக்க' வரைக்கும் அவர்களுக்கு ஜீவனாணு. சோகமான 'போனால் போகட்டும் போடா'வாகட்டும், மென்மையான ஒரு 'வெள்ளை மழை'யாகட்டும் அதிரடியான 'கண்ணதாசன் காரைக்குடி'யாகட்டும் எல்லாமே அங்கு 'அடிபொளி'தான்.

அதற்கு முக்கியமான காரணம் மலையாளத் திரைப்பாடல்களின் மேதாவித்தனம் என்றுதான் சொல்லவேண்டும். திரைப்படப்பாடல் என்பது இலக்கியக் களமல்ல என்பதையும் கவிமேதைமையைக் காட்டும் இடமல்ல என்பதையும் வரிகளின் எளிமையே பிரம்மாண்டம் என்பதையும் அறியாது எழுதப்படுவதுதான் மலையாளப் பாடல்கள் பரவலாக மக்களை சென்றடையாமலிருப்பதன் காரணம் என்று சொல்லலாம். ஒரு பாடல் அடிபொளியாக வேண்டுமென்றால் செறிவான கவித்துவம் அல்ல அவசியம்; ஓசை நயமும் அங்கங்கே மின்னலெனத் தெறிக்கும் புதுப்புது 'ஐடியா'க்களும்தான்.

முன்னமே வேறொரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும் இங்கு திரும்பச் சொல்லலாம்:
மலையாளக் கரையோர மீனவன்கூட, 'கடலின் அக்கரைக்குச் செல்பவர்களே, பதினாலாம் இரவின் பாற்கடல் அலையின் கடல் கன்னிகள் உதிர்க்கும் மாணிக்கத்தைக் கொண்டுவருவீர்களா' என்று ஒரு ஃபேன்டஸி கனவைத்தான் பாடுகிறான். தமிழ் மீனவனோ வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் திமிங்கிலம் தலைமையில் நடக்கும் காதல் திருமணத்தை தன் எளிமையான மொழியில் பாடுகிறான். 'காதல், காதல், காதல், காதல் போயின் சாதல்' என்பதல்ல திரைப் பாடல்; 'டாவு டாவு டாவுடா, டாவில்லாட்டி டையிடா' இதுதான் திரைப்பாடல்.

குத்துப்பாட்டில்கூட மென்மையான கவிதை தளும்பும் வரிகளைத்தான் மலையாளப் பாடல்களில் காணமுடியும். சமீபத்தில் பெரு வெற்றி பெற்ற லஜ்ஜாவதியே பாடலில் கூட காதலியுடன் பிள்ளைப்பிராயத்தில் ஈடுபட்ட ரசனையான நினைவுகள்தான் சொல்லப்பட்டிருக்கும். மலையாளப் பாடலாசிரியர்களுக்கு அந்தக்காலத்திலிருந்தே காதல் என்றால் அது கண்ணனும் ராதையும்தான். சமீபத்தில்கூட 'ஓடக்குழல் விளி கேட்டோ ராதே என் ராதே' என்று பாடல் எழுதப்படுகிறது. அதனாலேயே சாதாரண மலையாள ரசிகனுக்கு தமிழ்ப்பாடல்கள் நெருக்கமானவையாகத் தோன்றுகின்றன. எந்த மலையாள சேனலை எடுத்துக்கொண்டாலும் எந்த டேலன்ட் ஷோவை எடுத்துக்கொண்டாலும் அதில் இரண்டு தமிழ்ப்பாடல்களையாவது கேட்க முடியும்.

மிழகம் போலவே கேரளாவின் கோவில் திருவிழாக்களிலும் 'கானமேளா' ஆர்க்கெஸ்ட்ரா இன்றியமையாதது. இருபது தமிழ்ப்பாடல்கள், பத்து இந்திப்பாடல்கள், ஐந்து மலையாளப் பாடல்கள் இதுதான் அந்த மேடைகளின் சூத்திரமாக இருக்கும். பெரும்பாலும் தமிழகத்திலிருந்துதான் இசைக்குழுக்கள் வரவழைக்கப்படும். ஏழெட்டு வருடங்களுக்கு முன் நான் இதுபோன்ற மேடைக்கச்சேரிகளுக்கு பலமுறை சென்றிருக்கிறேன். நான் ஒரு மேடைப்பாடகன் என்று நினைத்துவிடவேண்டாம். கோவையிலிருந்த பல இசைக்குழுக்களிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். அதனால் வேலை 'அதிகமில்லாத' நாட்களில் நானும் அவர்களுடன் செல்வதுண்டு. யாராவது கேட்டால் இசைக்குழுவின் மேலாளர் என்று அறிமுகப்படுத்துவார்கள். சிலசமயம் 'இவர்தாங்க எங்க லிரிசிஸ்ட்' என்று அறிமுகப்படுத்துவார்கள். ஏற்கனவே எழுதப்பட்ட பாடல்களைப் பாடும் இசைக்குழுவில் லிரிசிஸ்ட்டுக்கு என்ன வேலை என்று யாரும் கேட்டதில்லை.

அன்று கேரளாவில் ஷோரணூர் என்ற இடத்தில் கச்சேரி. வாளையார் செக்போஸ்ட்டில் நிற்கிறதோ இல்லையோ எல்லை கடந்தவுடன் 'பெவரேஜஸ் கார்ப்பரேஷனின்' முதல் கடையிலேயே டெம்போ டிராவலரை நிறுத்திவிடவேண்டும் என்பது ஒரு விதி. கச்சேரிக்கு முன் ஒரு 'கட்டிங்', கச்சேரி முடிந்தபின் அரையோ முழுசோ என்பதும் ஒரு விதி.
ஷோரணூரில் கச்சேரி துவங்கியது. நான் இசைக்குழுவின் வேனிலேயே அமர்ந்துகொண்டேன். முதலில் சில பக்திப் பாடல்கள். ஒரு பாடகர் ஒட்டடைக்குச்சி போல் நெடுநெடுவென்று இருப்பார். சதாசிவம். சதா கிருஷ்ணனின் பாடலைப் பாடுவதுதான் அவருக்கு வாய்த்தது. டி.எம்.சௌந்தரராஜனின் குரலைப் பிரதியெடுத்துப் பாடுபவர். இந்த சரீரத்திலிருந்து இப்படி ஒரு சாரீரமா என்று வியக்க வைப்பார். முதல் சில பக்திப் பாடல்களில் 'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே' இல்லாமல் இருந்ததே இல்லை. அனுபவித்துப் பாடுவார். அதுவும் பாடலின் இறுதியில் நிறுத்தி நிதானமாக புருஷோத்தமன் குரல் பா............ என்று அந்த 'பா' வின் 'ஆ'காரத்தை 'தம்' பிடித்து இழுத்து 'டுங்களே' என்று முடிப்பார். எவ்வளவு நேரம் ஆகாரத்தை நீட்டுகிறாரோ அவ்வளவு கைதட்டல் கிடைக்கும் என்பது அவரது விசுவாசம். அவரது விசுவாசம் எப்போதும் அவரை ரட்சித்தே வந்திருக்கிறது. இன்றைக்கு 'கட்டிங்' கொஞ்சம் அதிகம் போல. ஆலாபனை நீண்டுகொண்டே போனது. இதுவரை கேட்டதிலியே மிக நீளமான பா.

நான் வேனிலிருந்து இறங்கி வேனின் பின்னால் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு நின்றேன். என்னை நோக்கி ஒருவர் வந்தார். பக்திப் பாடல்கள் முடிந்து அந்த அரபிக்கடலோரம் துவங்கிவிட்டது. 'ட்ரூப்பிலே ஆளாணு அல்லே?' என்று கேட்டார். 'அதெ' என்றேன். நல்ல வாசம். ஸ்டெடியாக இருப்பதாக தள்ளாடிக் காண்பித்தார். 'மலையாளமும் தமிழும் அறியாம் அல்லே' என்று கேட்டார். 'அதெ' என்றேன். 'ஆ பாட்டுகாரியோடு மலையாளம் சம்சாரிக்குன்னதும் மற்றுள்ளவரோடு தமிழ் சம்சாரிக்குன்னதும் ஞான் கேட்டு' என்றார். ஆசுவாசமாக வேனில் சாய்ந்து நின்று கொண்டார். 'எனிக்கொரு காரியம் மனசிலாயில்லா' என்றார். 'எந்து கார்யம்' என்றேன். குரல் குழற ஆரம்பித்திருந்தது. 'காரியம் அல்ல, ஒரு வாக்கு' என்றார். 'எந்து வாக்கு' என்றேன். வாக்கு, சொல், வார்த்தை. 'மாஷே, ஒரு தமிழ் வாக்காணு, அதின்டெ அர்த்தம் பறயாமோ' என்றபடி அப்படியே தரையில் குந்தி உட்கார்ந்தார். நான் கீழே பார்த்து 'எந்து வாக்கு' என்றேன் மறுபடியும். அவர் மேலே பார்த்து 'ஆ... ஆ... பாட்டு கேட்டில்லே? புள்ளாங்குழல்..? அதிலெ ஒரு வாக்கு...' என்று சொல்லச் சொல்ல தலை தொங்கியது.

அரபிக்கடலின் ஓசையில் பொறுமையிழந்து 'எந்து வாக்கு?' என்று அலறினேன்.

'டுங்களே' என்றபடி நிலம் பதிந்தார்.

மலையாளக் கரையோரம் 4 : குருவாயுபுரத்து ஹோர்லிக்ஸ் விசேஷங்கள்

நான் ஒரு 'நிரீசுவரவாதி' - நாத்திகன் என்றாலும் அம்பலங்களுடனும் பூஜை அனுஷ்டானங்களுடனும் எப்போதும் எனக்கு நெருங்கிய உறவு உண்டு. முக்கியமான ஹோமங்களில் வந்து வெறுமனே உட்காருங்கள் போதும் என்று என் நண்பரான தந்திரி ஒருவர் அடிக்கடி அழைப்பதுண்டு. என் வேஷவிதானம் அப்படி. சமீபத்தில் நண்பர் ஜெரால்டு தன் சீரியலில் நடிக்க அழைத்தார். அதுவும் பூசாரி வேடம்தான்.

கட உள் என்ற கருத்தாக்கத்தின்படி பார்த்தால் கோவில்கள் எப்போதும் உள்ளத்தைக் கடக்க வைப்பவைதான். கேரளத்தின் பெரும்பாலான கோவில்களுக்கும் சென்றிருக்கிறேன். பெரும்பாலும் எல்லாக் கோவில்களிலும் ஒரு தூரத்து உறவினராவது பணியில் இருப்பார். எனவே தங்குமிடம் பெரும்பாலும் கிடைத்துவிடும். உணக்கச்சோறின் ருசியே தனிதான்.

கல்லூரிக் காலங்களில் அடிக்கடி குருவாயுபுரத்துக்கு செல்வதுண்டு. கிருஷ்ணனிடம் கொண்ட ஈர்ப்பு அல்ல; வேறொரு கதையது; இது வேறொரு கதை.

குரு பிரகஸ்பதியும் வாயுதேவனும் சேர்ந்து நிர்மாணித்த கோவில் என்பதால் குருவாயுபுரம்; குருவாயூர். அதிகாலை நிர்மால்ய தரிசனம் மிக பிரசித்தி. என் நண்பன் பி.வி.மேனன் சொல்வான்: இந்த அதிகாலை நேரத்தில் வரிசையில் நின்றிருக்கும் எல்லாப் பெண்களின் முகத்திலும் குடிகொண்டிருக்கும் ஒரு கோபிகா பாவம் இருக்கிறதே, இதை தரிசிப்பதற்காகவே இந்த பூலோக வைகுண்டத்துக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் வரலாம்.
குருவாயூருக்கு போகிறபோதெல்லாம் மேற்கு நடையில் உறவினர் ஒருவர் வீட்டில் தங்குவது வழக்கம். ஆனால் அந்த முறை பி.வி.மேனன் கூட இருந்ததால் லாட்ஜில் தங்க வேண்டியதாயிற்று. பனச்சிக்காட் வித்யாதர் மேனனும் நானும் கல்லூரித் தோழர்கள். அவன் எனக்கு ஒரு வருடம் சீனியர். காளிதாஸன் விவரித்த கள்ள சன்யாசி போன்றவன்.

ஒரு சன்னியாசி கடையில் இறைச்சி வாங்கிக்கொண்டிருந்தார். அதை கவனித்தான் ஒரு வழிப்போக்கன். அவர்களின் சம்பாஷணையை ஒரு செய்யுளாகத் தருகிறார் காளிதாஸன்.

பிக்ஷோ, மாம்ச நிஷேவணம் கிமுசிதம்? கிம் தேன மத்யம் வினா?
மத்யம் சாபி தவப்ரியம்? ப்ரியம் அஹோ வாராங்கனாபிஸ்ஸமம்
வாரஸ்த்ரீ ரதயே குதஸ்தவ தனம்? தியூதேன சௌர்யேண வாம்.
சௌர்யதூத பரிஸ்ரமோடஸ்தி பவத ப்ரஷ்டஸ்ய கான்யா கதி?

சன்யாசியே, இறைச்சி சாப்பிடுவது சரியா?
தவறுதான், மதுவில்லாமல் இறைச்சி சாப்பிடுவது.
ஓ உங்களுக்கு மதுவும் பிடிக்குமா?
பிடிக்குமாவது, வேசிகளைப் போலவே மதுவும் இஷ்டம்தான்.
ஓஹோ, வேசிகளிடம் போக உங்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கும்?
சூதாட்டமும் திருட்டும்தான்.
சன்னியாசியான நீங்கள் இதெல்லாம் செய்யலாமா?
கதியற்றவனுக்கு வேறு கதி என்ன?

(ஷோலே முதல் மன்மத லீலை வரை பல பெரும் படைப்பாளிகள் இதே போல 'சிந்தித்திருப்பது' உங்களுக்கே தெரியும்.)

காலை தரிசனம் முடிந்த பிறகு அவன் குருவாயூரின் இண்டு இடுக்கான ஒரு இடத்தில் ஓடுபோட்ட ஒரு சிறு டீக்கடைக்கு அழைத்துப் போனான். காலை உணவு இங்கேயா என்று முகம் சுளித்த என்னிடம் ஒரு சாயா மட்டும் சாப்பிடலாம் என்றான். இந்த இடத்தைத் தேடி சாயா சாப்பிட வருகிறான் என்றால் நிச்சயமாக கடைக்காரருக்கு ஒரு மகள் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அங்கு இருந்ததோ ஒரு பெண்மணி மட்டுமே. பி.வியைக் கண்டதும் அவள் முகம் பிரகாசமானது. 'ரண்டு சாயா இவிடெ, பின்னே ரண்டு ஹோர்லிக்ஸ் டோக்கன்' என்றான் பி.வி. 'ஓ சாய காப்பியெல்லாம் மடுத்து அல்லே...' என்றபடி' ஹோர்லிக்ஸ் வெல கூடி கேட்டோ, ஆயிரம் ரூபா.' என்றாள் அந்தப் பேரிளம்பெண். எனக்கு ஒரு மாதிரி தலை சுற்றுவதுபோல இருந்தது. என்ன நடக்கிறது இங்கே? 'எனக்கு அறியாம்.' என்றபடி இரண்டாயிரம் ரூபாயைக் கொடுத்தான். அவள் இரண்டு சிகரெட் அட்டைகளில் ஹோர்லிக்ஸ் என்று எழுதிக் கொடுத்தாள். சாயா சாப்பிட்டு வெளியே வந்தோம். 'என்னடா பண்ணிட்டிருக்கே? ஒண்ணும் புரியல' என்றேன். 'பேசாம வா' என்றான். ஒரு டாக்சி பேசினான். சாவக்காடு போய் அங்கே ஒரு மணிநேரம் வெய்ட் செய்து திரும்பி வரவேண்டும் என்றான்.

ஒரு காலத்தில் சவங்களின் காடாக இருந்தது சாவக்காடு. மத்தியின் மணம் வீசும் கடலோர சிறு நகரம். குருவாயூரிலிருந்து பக்கம்தான். ஒரு தனிமையான பங்களாவின்முன் கார் நின்றது. வராந்தாவில் கொம்பன் மீசை வைத்த ஆள் மப்டி போலீஸ் போல இருந்தான். பிவி டோக்கனைக் காண்பித்தான். 'ம்... அகத்து போய்க்கோ' என்றான் அவன்.

உள்ளே மாடிப்படியேறி ஒரு அறை. விசாலமான அறை. அங்கு மூன்று அறைகளுக்கான வழிகள் இருந்தன. இங்கேயும் ஒரு பெரிளம்பெண் தோன்றினாள். பிவியைப் பார்த்து சிரித்தாள். 'சாயயோ காப்பியோ அதோ ஹோர்லிக்சோ' என்றாள். 'ஹோர்லிக்ஸ்' என்றபடி டோக்கனைக் கொடுத்தான். 'ம்... இரிக்கூ' என்றபடி ஒரு அறையை நோக்கிப் போனாள். பிவி அந்தக் கதவுகளைக் காட்டி ஒன்று சாயா 100 ரூபா, இன்னொன்று காபி 500 ரூபா, அது ஹோர்லிக்ஸ் 1000 ரூபா' என்றான். ஹோர்லிக்ஸ் கதவு திறந்தது.... என்ன சொல்ல... கிருஷ்ண கிருபா சாகரம் ! ஏழு கோபிகைகள் நின்றிருந்தார்கள். 'எல்லாரும் கோளேஜ் குட்டிகளாணு...' என்றாள் பேரிளம்பெண். நான் பிவியை முறைத்து 'இதுக்குத்தான்னு முதல்லயே சொல்லிருந்தேன்னா நான் வந்திருக்கமாட்டேன்ல... ஆளை விடு சாமி' என்றபடி கீழே இறங்கினேன்.

மலையாளத்தின் 'ஹாஸ்ய சாம்ராட்' என்றழைக்கப்படும் மறைந்த எழுத்தாளர் 'வி.கே.என்'னின் 'பையன் கதைகளின்' ஒரு பகுதி நினைவுக்கு வந்தது:
தங்களின் வேசியிடம் போன அனுபவங்கள் பற்றி மூன்ற பேர் பகிர்ந்துகொள்கிறார்கள். பையன் சொல்கிறான்:

என் அனுபவம் வேறு மாதிரி. ஏஜென்ட் என்னிடம் வந்து, சார் மூன்று பேர் இருக்கிறார்கள். ஒருத்தி நடுத்தர வயதுக்காரி. ஒருத்தி இருபத்தெட்டு வயதுக்காரி. இன்னொருத்தி கொக்காலையை சேர்ந்தவ. இருபது வயசு. பி.ஏ. பாஸ் பண்ணிருக்கா சார்.

அவளே வரட்டும். வரும்போது மறக்காம சர்டிபிகேட்டையும் எடுத்தாரச் சொல்லு.

மலையாளக் கரையோரம் 3 - முதல் ஆணியக் கவிதை

எண்பதுகளின் இறுதி வருடங்களில் தமிழ்நாட்டில் முதல் கணினி பட்டப்படிப்பு அறிமுகமானபோது அந்தப் பொறியில் சிக்கிக் கொண்ட மவுஸ்களில் அவனும் ஒருவன் - அன்றைய கணினிகளில் மௌஸ்களைக் காண்பது மிக அரிது. மவுஸ் இல்லாமல் கணினியை இயக்க முடியுமா என்று கேட்காதீர்கள். அன்றெல்லாம் அலைபேசியில்லாமல்கூட வாழ்ந்தவர்கள்தானே நாம். அன்றைய கணினி யுகம் பற்றி குறைந்தபட்சம் 386 கட்டுரைகளாவது எழுத முடியும். அது பின்னர் எப்போதேனும். இன்றைய பேசுபொருள் வேறு.

கணினி அறிவியல் மாணவனாக இருந்தபோதும் அன்று கல்லூரியின் பிரதானக் கவிஞனாக அறியப்பட்டவன் அவன்தான். கையில் கணையாழி கொண்டிருக்கும் விசித்திர ஜீவியாக கணினி மாணவிகள் விலகவும் கலை மாணவிகள் அணுகவுமான இயல்பினனாயிருந்தான். அப்போது நடைமுறையிலிருந்த கடைக்கால நெம்புகோல் கவிதைகள் புனைவதில் மட்டுமல்லாது எண்சீர்கழிநெடிலடி விருத்தங்கள் செய்வதிலும் தான் நிபுணன் என்பதாகவும் நினைத்துக் கொண்டிருந்தான். அவ்வப்போது மலையாளக் கரையோரம் சென்று வந்து கொண்டிருந்ததால் மலையாளத்தின் 'அக்ஷர ஸ்லோகம்' எனும் கவிதைச் செயல்பாடு பற்றியும் கொஞ்சம் தெரிந்து வைத்திருந்தான்.

அக்ஷர ஸ்லோகம் என்பது செய்யுள் சொல்வதற்கான ஒரு போட்டி. சென்ற தலைமுறையில் எந்த கேரள கிராமத்தை போய்ப் பார்த்தாலும் அம்பல மரத்தின் சுவட்டிலோ இல்லத்து முற்றங்களிலோ இப்படிப்பட்ட அக்ஷர ஸ்லோக சபைகள் காணக் கிடைத்திருந்தன. இங்கு ஸ்லோகம் என்பதற்கு மந்திரம் என்பதல்ல பொருள்; செய்யுள் என்பதே.

அக்ஷர ஸ்லோகம் என்பது இன்றைய அந்தாக்ஷரியின் முன்னோடி என்று சொல்லலாம். 4 அடிகளுடைய செய்யுட்கள். தானே இயற்றியதாகவோ பிரபல புலவர்கள் இயற்றியதாகவோ இருக்கலாம். முதல் நபர் ஒரு ஸ்லோகம் சொன்னவுடன் அந்த ஸ்வோகத்தின் மூன்றாவது அடியின் முதல் எழுத்தில் அடுத்த நபர் அடுத்த ஸ்லோகத்தைத் தொடங்க வேண்டும். அந்த ஸ்லோகங்கள் பூந்தானத்தின் ஸ்ரீகிருஷ்ண கருணாமிர்தத்தில் இருந்தும் இருக்கலாம். எரணாகுளம் ஹோட்டல் சாப்பாடு பற்றி தானே இயற்றியதாகவும் இருக்கலாம்.

எட்டாண்டு எத்திய தயிரும் என் சிவனே சுண்ணாம்பு சோறும் புழுக்
கூட்டம் தத்திடும் ஊறுகாயும் அய்யோ கசப்பேறிய பொரியலும்
கெட்டபலாவில் மோரூற்றியின்னும் கெடவைத்த குழம்பும் இம்
மட்டில் பட்சணமுண்டு வெளிவரலாம் எரணாகுளம் ஹோட்டலில்.

அன்று முதல் தானும் தமிழில் இதுபோன்ற முயற்சிகளைச் செய்யலானான். எது கையில் கிடைத்தாலும் எதுகையாய் மாற்றி ஒரு செய்யுள் புனைந்து விடுவான். உதாரணத்திற்கு இரண்டு:
(முறைப்படி சீர் பிரிக்காமல்)

1. பாடினாள் பின்னாடியும் காட்டினாள் முகம்
ஏந்தியளித்திட்டாள் முத்தம் இதழி னுட்புகுந்து
கூடினாள் தள்ளிப்போய் கல்யாணப் பந்தரின்கீழ்
வாந்தியெடுத்திட்டாள் முட்டாள்.

2. மைக்கேல் ஏஞ்சலோ வைரஸ் புகழ்

ஊஞ்சலாடும் மனது கேட்கின்றதோர் நாள் லீவு
காஞ்சு கிடப்பாள் அனிதா மேட்னிஷோ போவதற்காய்
வாஞ்சையில் பூட்டுதே கம்ப்யூட்டர் - மிக்கயில்
ஏஞ்சலோ வைரசே நீவாழ்.

இப்போது வலையுலகில் தமிழில் மரபுக் கவிதைகளும் மலையாளத்தில் அக்ஷர ஸ்லோகங்களும் உலகமெங்குமிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறன்றன. மேற்கண்டவற்றை விட நவீன பாடுபொருட்களில் மரபுக் கவிதைகள் வகைதொகையின்றிக் கிடைக்கின்றன இணையத்தில்.

ஆனாலும் அக்ஷர ஸ்லோகம் பற்றி எண்ணும்போதெல்லாம் அவனுக்கு மஹாகவி காளிதாஸனோ அல்லது மாடமனை திரிவிக்ரமன் பட்டதிரிப்பாடோ நினைவுக்கு வராமல் இருப்பதில்லை. திரிவிக்ரமன் அக்ஷரஸ்லோகத்தில் விற்பன்னர். ஒரு முறை மஹாகவி காளிதாஸன் முதன்முதலில் எழுதிய ஸ்லோகம் என்று ஒரு சாதனத்தை சொல்லிக் காண்பித்தார். அதற்கு முன் அந்த செய்யுள் உருவான இதிகாசத்தையும் சொன்னார்:

காளிதாஸன் தான்தோன்றித்தனமான கற்பனைகளில் திளைத்து எங்கென்றிலாது அலைந்து திரிந்து கொண்டிருப்பார். அவ்வாறு ஒருக்கால் கூரிருட்டினுள் காட்டிற்குள் அலைந்து கொண்டிருந்தார். நான்காம் யாமம் தாண்டி பொழுது புலரும் வேளையே வந்து விட்டது. அந்த இருட்டுக்குள் ஒரு ஆற்றைக் கண்டார்; ஆனந்தம் கொண்டார். ஆடைகளையெல்லாம் அவிழ்த்து வீசி ஆற்றில் குதித்தார். அந்த சமயம் பார்த்து அருகிலுள்ள கிராமம் ஒன்றிலிருந்து ஒரு யுவதி அங்கு வந்தாள். எப்போதும் அந்த இருளில் வந்து ஆற்றில் குளிப்பது அவள் வழக்கம். வழக்கம் போல அருகில் யாரும் இல்லை என்ற நினைப்பில் அவளும் ஆடைகள் முழுதும் களைந்து ஆற்றில் இறங்கினாள். நீரில் மூழ்கிக் கிடந்த காளிதாஸன் வெளிவந்து தலையைச் சிலுப்பிப் பார்க்கையில் அவரின் முன்னால் அவள். அதிர்ச்சியில் உறைந்துபோயினர் இருவரும். ஆனாலும் அவர்களின் அனிச்சை உணர்வுகள் விழித்தே யிருந்தன. ஒரு கையால் தன் தனங்களையும் ஒரு கையால் தன் அல்குலையும் மறைத்துக் கொண்டாள் அவள். கையறு நிலையில் காளிதாசனுக்குள் ஒரு கவிதைதான் முகிழ்த்தது:

ஹே பாக்யவதீ நாரீ
ஏக ஹஸ்த்யேன கோப்யதே
நிர்பாக்யம் காளிதாசஸ்ய
த்விமுஷ்டிம் சதுரங்குலம்.

வியாக்கியானம்:

பெண்ணே நீ பாக்கியவதி!
ஒரு கையாலேயே உன் மானத்தை மறைத்துவிட்டாய்
பாவம் இந்த காளிதாசன் துர்பாக்கியவான்
இரண்டு கைகளை உபயோகித்தும்
நான்கு அங்குலம் மீதமிருக்கிறதே!

இதுதான் காளிதாசனின் முதல் கவிதையா அல்லது திரிவிக்ரமன் பட்டதிரி எதாவது மண்டபத்தில் எழுதி வாங்கியதா என்று தெரியவில்லை. எவ்வாறாயினும் உலகின் முதல் ஆணியக் கவிதை இதுதான் என்று சொல்லாமில்லையா என்று கேட்கிறார்
திரிவிக்ரமன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?